திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா இந்த ஆண்டு இல்லை – கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம்!
காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி விழா இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகிறது. இதன் அடிப்படையில், அடுத்த சனிப் பெயர்ச்சி விழா 2026ஆம் ஆண்டில் மட்டுமே நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் சனிப் பெயர்ச்சி நிகழும் எனக் கூறப்பட்டதால், இந்த ஆண்டு (வரும் மார்ச் 29ஆம் தேதி) சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும் என்ற தகவல் பரவியது. இதனால், பக்தர்கள் மற்றும் தரிசன ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடியிருந்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்தை நீக்குவதற்காக, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஆலயத்தில் மார்ச் 29ஆம் தேதி எந்தவிதமான சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது. அன்றைய தினம் வழக்கமான தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், பக்தர்கள் தவறான தகவல்களை நம்பாமல், கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடுகளை செய்யுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.