Daily Publish Whatsapp Channel
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்படுகிறது
மாத வழிபாட்டை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று (ஜூலை 16) மாலை பக்தர்களுக்காக நடை திறக்கப்படுகிறது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி மாலை, நவகிரக பிரதிஷ்டை மற்றும் அதனை ஒட்டிய வழிபாடுகளுக்காக கோயில் நடைத் திறக்கப்பட்டிருந்தது.
அதன்பின், ஜூலை 12-ஆம் தேதி பல்வேறு பஜனை, யாகங்கள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. ஜூலை 13-ஆம் தேதி நவகிரக கோயிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பின்னர், அதே நாளிரவு 10 மணிக்கு நடை மூடப்பட்டது.
மீண்டும், மாதாந்திர பூஜையின் காரணமாக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு, தந்திரிகள் கண்டரரு ராஜீவரும், பிரம்மதத்தன் ராஜீவரும் தலைமையிலான வழிபாட்டின்போது, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறக்கும் பணி மேற்கொள்கிறார்.
நாளை (ஜூலை 17) அதிகாலையில் தொடங்கும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை அடுத்து, ஜூலை 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை மீண்டும் மூடப்படும். அதனைத் தொடர்ந்து, நிறைபுத்தரி பூஜையை ஒட்டி ஜூலை 29-ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். அந்த நாளில் நடைபெறும் ஒரு நாள் வழிபாட்டுக்குப் பிறகு, ஜூலை 30-ஆம் தேதி இரவு நடை மூடப்படும்.
இந்த காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குடை, மழைக்கோட் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வர வேண்டும் என தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.