போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வரும் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கடந்த 45 மாதங்களாக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார். போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளி மாணவியை பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை வழக்குகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் வரும் 8 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, அசோக்குமார் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் அனைத்து அதிமுக நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.