நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்தி, நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை நீக்குவதை நோக்கமாகக் கொண்டு தற்போது நடைமுறையில் இருக்கும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதிய வக்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இந்த மசோதாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி இந்த மசோதாவிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். “நன்றி மோடி ஜி” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இந்த சட்டத்திருத்தம் முஸ்லிம் சமூகத்தின் நலனை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று அவர்கள் குறிப்பிட்டதுடன், சில அரசியல் அமைப்புகள் வெறும் அரசியல் லாபத்திற்காக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறினர்.