2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
நடப்பு 2024-25 நிதியாண்டிற்கான முழு மத்திய பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடப்பதால், கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது தேர்தல் முடிந்து, மத்தியில் பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இந்த நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இதுவாகும். பிரதமர் மோடியின் 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
குறிப்பாக, வளர்ச்சியடைந்த இந்தியாவை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு, அதற்கான திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், அமிர்த காலத்தின் மிக முக்கியமான பட்ஜெட் இது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பு
அதே சமயம் இந்த பட்ஜெட் குறித்து மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். குறிப்பாக, வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், தமிழகம் போன்ற பல்வேறு மாநில அரசுகளும், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வெளியீடு, ஒப்புதல், நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் பூர்த்தி செய்யுமா? இன்று தெரிந்துவிடும்.
இதனிடையே, லோக்சபா சேவை ஆய்வுக் குழு நேற்று கூடி, மத்திய பட்ஜெட் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதித்தது. பட்ஜெட் விவாதத்திற்கு 20 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ரயில்வே, கல்வி, சுகாதாரம், MSME மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், நடப்புத் தொடரில் வேறு சில விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.