எந்த பிரச்சனையையும் தீர்த்து அமைதியை ஏற்படுத்த நட்பு நாடுகளுடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்குடன் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார் பின்னர் அவர் கூறியதாவது:
போலந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த டொனால்ட் டஸ்க் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் பாராட்டினார். மேலும் பேசிய மோடி, ரஷ்யா – உக்ரைன் போரின் போது உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க போலந்து செய்த உதவியை மறக்க முடியாது என்றார்.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட போலந்து, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
எந்தவொரு நெருக்கடியிலும் அப்பாவி உயிர்கள் பலியாவது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது என்றார்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும் தனது நட்பு நாடுகளுடன் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
உணவு பதப்படுத்துதலில் போலந்து உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தத் தொழில் தொடர்பான போலந்து நிறுவனங்களையும் இந்தியாவில் தொழில் தொடங்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.