சர்வதேச வர்த்தகத்திற்கு சீனாவைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை மாறி வருகிறது. உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை நம்பியுள்ளன. சீனாவை விட இந்தியாவின் துறைமுகங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அது பற்றிய செய்தி தொகுப்பு.
உலகப் பொருளாதாரத்திற்கு துறைமுகங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச சரக்குகளில் 70 சதவீதம் துறைமுகங்கள் வழியாகவே செல்கிறது.
உலகின் ஐந்து பெரிய கொள்கலன் துறைமுகங்களில் நான்கு சீனாவில் உள்ளன. சர்வதேச அளவில் முதல் 20 துறைமுகங்களில் ஐந்து மட்டுமே இப்போது கிழக்கு ஆசியாவிற்கு வெளியே அமைந்துள்ளன.
பெரும்பாலான கிழக்கு ஆசியா-அமெரிக்கா-ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க சரக்குக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாகச் செல்கின்றன. இந்தியா 7517 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் 95 சதவீத வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. இது இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்பில் 70 சதவீதமாகும்.
இந்தியாவில் 12 பெரிய மற்றும் 205 சிறிய மற்றும் இடைநிலை துறைமுகங்கள் உள்ளன. ஜூன் மாதத்தில் 12 முக்கிய இந்திய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் சுமார் 15.12 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கொச்சி துறைமுகம் அதிக சரக்குகளை கையாண்டது.
இந்தியா வழியாக செல்லும் ஒவ்வொரு 4 கப்பல் கொள்கலன்களில் ஒன்று மும்பைக்கு தெற்கே அரபிக் கடலுக்குள் செல்லும் கப்பல்களில் ஏற்றப்படுகிறது அல்லது இறக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சரக்கு பெட்டகங்களின் ஓட்டம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் ஏற்பட்ட மோதலின் மத்தியில், சர்வதேச வர்த்தக விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அடுத்த அமெரிக்க அதிபராக யார் வெற்றி பெற்றாலும், அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் நிலையற்றதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் ஷரத் வாக் கூறும்போது, “உலக நாடுகள் சீனாவை முழுமையாக சார்ந்திருக்க விரும்பாததால், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை சிறந்த நாடாக தேர்ந்தெடுத்துள்ளன.
எடுத்துக்காட்டாக, வால்மார்ட் போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விநியோக தளத்தை இந்தியாவிற்கு மாற்றுகின்றனர்.
ஏற்கனவே ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், ஐந்து முனையங்களில் ஒன்றின் அளவை இரட்டிப்பாக்க, இரண்டு முனையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தஹானு அருகே வடவான் ஆழ்கடல் துறைமுகத்தை 76,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த கடந்த ஜூன் 19ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத்திட்டம் ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த துறைமுகம் முடிவடையும் போது உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டத்தின் நோக்கத்தின்படி சுமார் 10 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் துறைமுகம் கட்டப்படுகிறது.
புதிய துறைமுகத்தில் ஒன்பது கொள்கலன் முனையங்கள் அடங்கும். ஒவ்வொன்றும் 1000 மீட்டர் நீளம் கொண்டது, நான்கு பல்நோக்கு பெர்த்கள், கடலோர பெர்த், நான்கு திரவ சரக்கு பெர்த்கள், ஒரு ரோ-ரோ பெர்த் மற்றும் ஒரு கடலோர காவல்படை பெர்த். இது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. அதாவது, 24,000 பெட்டிகள் வைக்கும் அளவுக்கு பெரிய சரக்கு கப்பல்களை கையாளும் திறன் கொண்டதாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற துறைமுகங்கள் 18,000 கொள்கலன்களைக் கொண்ட கப்பல்களைக் கையாள முடியும்.
ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இந்தியாவின் சரக்குகளில் 25 சதவீதம் சிங்கப்பூர், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கொழும்பு, இலங்கை துறைமுகங்கள் வழியாக அனுப்பப்படுகிறது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
இத்தகைய செலவுகளைக் குறைப்பதற்கும், விநியோக நேரத்தை விரைவுபடுத்துவதற்கும் புதிய துறைமுகம் இந்தியா உருவாக்குகிறது.
இதற்கிடையில், கேரளாவில் புதிய சர்வதேச துறைமுகமும் தானியங்கி முறையில் பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகரித்து வரும் பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைக்க மத்திய அரசும் ஆர்வமாக உள்ளது.
இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இந்தியாவின் கப்பல் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தாலும், சீனாவுக்கு மாற்றாக இந்தியா விரைவில் உருவாகும் என்று ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் (JNPA) தலைவர் உன்மேஷ் ஷரத் வாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். .
Discussion about this post