மும்மொழிக் கொள்கை: ஏனைய மொழிகளின் வளர்ச்சிக்கு தி.மு.க. அரசு என்ன செலவிடுகிறது? – முதல்வர் விளக்க வேண்டும்: அண்ணாமலை

0

மும்மொழிக் கொள்கை: ஏனைய மொழிகளின் வளர்ச்சிக்கு தி.மு.க. அரசு என்ன செலவிடுகிறது? – முதல்வர் விளக்க வேண்டும்: அண்ணாமலை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மொழி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையான நோக்கம், மாணவர்கள் பல மொழிகளை அறிந்து பயனடைய வேண்டும் என்பதே. தமிழகம் முழுவதும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சொந்தமான பள்ளிகள் உட்பட, தி.மு.க. ஆதரவாளர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் பல மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதால் சமத்துவ கல்விக்காக நாம் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மும்மொழிக் கொள்கையின் பொருள், தமிழகம் முழுவதும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் மொழிகளை படிக்க அனுமதிப்பதுதான். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், இதனை “இந்தித் திணிப்பு” என தவறாக விளக்குகிறார். உண்மையில் இந்தித் திணிப்பு நடப்பது தி.மு.க.வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான், அரசு பள்ளிகளில் அல்ல.

இந்நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் மீண்டும் “இந்தித் திணிப்பு” குறித்த கருத்தை முன்வைத்திருக்கிறார். மும்மொழிக் கல்வியை, இந்தித் திணிப்பு என திரித்துக் கூறுவதன் மூலம், பல மொழிகளை கற்கும் வாய்ப்பு பணக்கார மாணவர்களுக்கே என்று தி.மு.க. அரசு மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 2024-25 நிதியாண்டில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பிற மொழிகள் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு ரூ. 13 கோடி செலவழிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் ஏனைய மொழிகளின் வளர்ச்சிக்கும் சரியான அளவிலான நிதியுதவி செய்யுமா? என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here