WhatsApp Channel
பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை இந்திய தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களாக (விளம்பரத் தூதர்கள்) நியமித்து வருகிறது.
இந்த நியமனங்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும். முன்னதாக, தேசிய விழிப்புணர்வு சின்னமாக கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர்கான், சமூக சேவகர் நிருகுமார், பாடகர் ஜஸ்பிர் ஜாசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். அதேபோல் நடிகர்கள் சீத்தலா ரவி, ரோபோ சங்கர், பாடகி சித்ரா உள்ளிட்டோர் தமிழக தேர்தல் பிரசார தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த வரிசையில், வரும் 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முன்னிலையில் கையெழுத்தானது.
2017 ஆம் ஆண்டு வெளியான நியூட்டன் திரைப்படத்தில் ராஜ்குமார் ராவ் தேர்தல் அதிகாரியாக நடித்தார். அதுவும் சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் பணிபுரியும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்றார். இவற்றை முன்னிலைப்படுத்தி தேர்தல் ஆணையம் அவரை நியமித்துள்ளதாக தெரிகிறது.
Discussion about this post