அமெரிக்கா: இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் படுகாயம், 4 பேரின் நிலை கவலைக்கிடம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் உள்ள ஒரு பிரபலமான இரவு நேர கேளிக்கை விடுதியில் விடுமுறை சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது, இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோசமடைந்து, ஆத்திரம் அடைந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியது. எதிர்பாராத இந்த தாக்குதலால் அங்கிருந்தவர்கள் பரிதவித்து அலறியடித்துக் கொண்டு வெளியே தப்ப முயன்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்தவுடன், போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் தற்போது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், கேமரா காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை வைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.