திருப்பத்தூர் அருகே வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் நபரை தாக்கி, அவரின் குடும்பத்தினரை பற்றியும் ஆபாசமாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அருகே நாராயணபுரத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்திலிருந்து ரூ. 5 லட்சம் வீட்டு கடன் பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு மீதமுள்ள ரூ. 2.6 லட்சம் கடனை திருப்பிச் செலுத்துவதில் சில தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அந்த நிதி நிறுவனத்தின் சில ஊழியர்கள் சத்தியநாராயணன் வீட்டிற்கு நேரில் சென்று கடனை அடைக்க அழுத்தம் தந்ததோடு, அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலைமை மோசமாக மாறி, அந்த ஊழியர்கள் சத்தியநாராயணனை தாக்கியதோடு, அவரது மனைவி மற்றும் மகளின் மீதும் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சத்தியநாராயணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.