மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலரை படுகொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாவார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற காவலர் முத்துக்குமார், கஞ்சா வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த குழுவில் இருந்த சிலர், திடீரென அவரை கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க திண்டுக்கல் சரக ஐஜி தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேனி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறையினர் விரைந்து பணியாற்றி வருகின்றனர்.