தமிழகத்தில் வீணாக கடலில் கலக்கும் நதிநீரை விவசாய பயன்பாட்டுக்காக மாற்ற வேண்டும் – கோபால் கிருஷ்ணன் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் நதிநீர் பெரும்பாலும் பயனின்றி கடலுடன் கலக்கிறது. இதை விவசாய நிலங்களுக்கு திருப்பி விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழக நீர்மேலாண்மை விவசாயிகள் சங்கத் தலைவர் N.P. கோபால் கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத் துறையின் முதன்மை பொறியாளர் பொறி. சா.மன்மதனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ் தாயின் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இது புண்ணியம் பல கோடி செய்தவர்களுக்கே கிடைக்கும் அரிய வாய்ப்பு. இந்த பணியில் நீங்கள் தொடங்கிய திட்டங்கள் வெற்றிகரமாக, நீண்ட காலம் பயன்படக் கூடிய வகையில் அமைய வேண்டியது அவசியம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நம் பின்வரும் தலைமுறைகளுக்கும் பயனளிக்கக் கூடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மத்தியப் பிரதேசத்தில் நதிகளை இணைக்கும் திட்டத்தில் பிரதமர் முன்னோடியாக செயல்பட்டுள்ளார். அதுபோல், தமிழ்நாட்டிலும் தாங்கள் விருப்பமுள்ளால் அந்த மாநிலத்தின்பொறியாளர்களுடன் இணைந்து ஆலோசிக்கலாம். நீர் மாசுபடாமல் சேமிக்கப்படும் வகையில் திட்டமிடும்போது உங்கள் பெயரும் பொறியியலாளர் விஸ்வேஸ்வரையா போன்றோருடன் வரலாற்றில் இணைந்து நிற்கும்” என்றார்.
கோபால் கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்து, “நதிநீரைப் பயனுள்ளவாறு பயன்படுத்தும் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் எதிர்காலம் உறுதி செய்யப்படும். எனவே, இத்திட்டத்திற்கு அரசியல் மறுப்பு இல்லாமல், அனைத்து தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.