வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாகவே, வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் பிரதமர் உறுதிபூண்டுள்ளார் என்பதை, இந்த அவைக்கும், விவசாயிகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்த பட்ச ஆதாரமாக, அவர்கள் செலவு செய்த தொகையை விட கூடுதலாக 50 சதவீத தொகை வழங்கப்படுகிறது. தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ், விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய துறையில், தேவையான முதலீட்டை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறோம். விவசாயிகளின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம்.
விவசாயிகளின் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் என யாரும் நினைத்திருப்பார்களா?. 100 விவசாய ரயில்கள் வர உள்ளன. குளிர்பதன கிடங்கு வசதி துவக்கப்பட்டுள்ளது. இவை மூலம் விவசாயிகளுக்கு உதவி கிடைப்பதுடன், அவர்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு நியாயமான விலை கிடைத்துள்ளது.
வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரு அரசு தயார் எனக்கூறியதால், அந்த சட்டத்தில் பிரச்னை உள்ளது என நினைக்க வேண்டாம். குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். எந்த விவசாயியின் நிலத்தையும், வணிகர்கள் பறித்து கொள்ளும் வகையில், வேளாண் சட்டத்தில் ஏதாவது ஒன்று உள்ளதா என்பதை கூற வேண்டும். வேளாண் சட்டங்களில் உள்ள ஒரு குறையை கூட எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களால் கூற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.