புதிய அரசாங்கம் தேர்தலை நடத்த முடிவு செய்யும் போது, ​​அம்மா நாடு திரும்புவார்…. ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசத் ஜாய்

0

வங்கதேசத்தில் கலவரத்தை பாகிஸ்தான் உளவுத்துறை தூண்டி வருவதாக ஷேக் ஹசீனாவின் மகன் சஜித் வசத் ஜாய் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இஸ்லமியர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த நெருக்கடியால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அவர், வேறு நாட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடத்தி புதிய அரசு அமையும் வரை நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்துள்ளார். இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். அந்நாட்டு சட்டப்படி வங்கதேசத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இடைக்கால அரசாங்கமே நாட்டை வழிநடத்தும். இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

வங்கதேசத்தில் தொடர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசத் ஜாய் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய அரசாங்கம் தேர்தலை நடத்த முடிவு செய்யும் போது, ​​அம்மா (ஷேக் ஹசீனா) நாடு திரும்புவார். அவர் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. தற்போது அம்மா இந்தியாவில் இருக்கிறார். எனக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை. கட்சிக்காக தீவிரமாக உழைத்து, இப்போது தலைமை தாங்கி வருகிறேன்.

பாகிஸ்தான் உளவுத்துறை வங்கதேசத்தில் கலவரத்தை தூண்டி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர்களை போக விடமாட்டோம். கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here