“தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது” – கமலின் ‘தக் லைஃப்’ விவகாரத்தில் வேல்முருகன் எச்சரிக்கை

0

கன்னட திரைப்படமான ‘கேஜிஎப்’ உள்ளிட்ட இரண்டு பாகங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன. இந்தப் படங்களை தமிழர்கள், கன்னட படமாக அல்லாமல் ஒரு நல்ல திரைப்படமாகவே ஏற்றனர். ஆனால், கமல்ஹாசன் வெளியிட்ட கருத்து மட்டும், மொழி அரசியலாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால், அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் எந்த கன்னடப்படமும் திரையிட அனுமதிக்கப்படமாட்டாது,” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பாண்டுருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தம்மால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியதாவது: “‘தக் லைஃப்’ எனும் கமல்ஹாசன் நடித்த திரைப்படம், உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம், ‘உங்கள் கன்னடம் தமிழிலிருந்துதான் தோன்றியது’ எனக் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வுகளின்படி, கமல்ஹாசனின் கூற்று தவறு அல்ல.

ஆனாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கன்னட அமைப்புகள், இந்த கருத்தை தவறாக விளக்கி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான செயல்களை மேற்கொண்டு வருகின்றன. அவர்கள் ‘தக் லைஃப்’ படத்தின் போஸ்டர்களையும் பேனர்களையும் கிழித்துவிட்டு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் படம் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறுகின்றனர். கன்னட சினிமா வர்த்தக சபையும் இதையே வலியுறுத்தியுள்ளது.

இதில் கூடுதலாக, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் போது நீதிபதி நாகபிரசன்னா பல கேள்விகளை எழுப்பினார். ‘கமல்ஹாசன் வரலாற்று ஆய்வாளர் வேறு? மொழியியல் நிபுணரா? தமிழிலிருந்து கன்னடம் தோன்றியது என எதனை அடிப்படையாகக் கூறினார்?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியுள்ளார். மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்குமே என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ‘நானே படம் பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் இச்சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை. மன்னிப்பு கேட்டிருந்தால் எல்லாம் தீர்ந்திருக்கும். பேசப்பட்ட கருத்தைத் திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காதவர்களின் படங்களை ஏன் திரையிட வேண்டும்? மன்னிப்பே தீர்வு’ என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதி நாகபிரசன்னா, ஒரு நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராகவே இந்த விஷயங்களில் அணுகியுள்ளார். அவரின் இன உணர்வை மதிக்க வேண்டியதுதான். ஆனால், நீதி வழங்கும் இடத்தில் மொழி, இனம், மத பேதம் இருக்கக்கூடாது. தமிழர்களுக்கான நீரும் மறுக்கப்பட்ட நிலையில், இப்போது நீதியும் மறுக்கப்படுகிறது.

தமிழர்களுக்கு எதிராக, கர்நாடக முதல்வர், பாஜகவின் மாநிலத் தலைவர் உள்ளிட்டோர், கலவரம் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். நீதிபதியின் உச்சநிலைப்போன்ற கருத்துகளும் அதே திசையில் செல்கின்றன. இது தமிழர்கள் மீது விரோதம் தூண்டும் நிலையை உருவாக்குகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில், கேஜிஎப் உள்ளிட்ட கன்னட படங்கள், வெறும் படம் என்ற நிலைபாட்டில் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் கமல்ஹாசன் விஷயத்தில் மட்டும் மொழி அடிப்படையில் அணுகப்படுகிறது. ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் எந்த கன்னட படமும் வெளியிட அனுமதிக்கப்படக்கூடாது. தமிழ்த் திரைப்பட சங்கங்களும், ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடும் முயற்சியில் களமிறங்க வேண்டும்.

இல்லையேல், தமிழ் சினிமாவில் கன்னட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தவிர்க்க வேண்டும். கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கும். இந்த விவகாரத்தை காரணமாக்கி கர்நாடகத் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்குமானால், அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, நாங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்,” என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here