WhatsApp Channel
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆனார். டேவிட் வார்னர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். Mournes Labuschean 27 ரன்களிலும், மேக்ஸ்வெல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
200 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷான்(0) கேட்ச் ஆனார். ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரில் ரோகித் சர்மா(0) எல்பிடபிள்யூ. அவர் பாணியில் வெளியேற்றப்பட்டார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர்(0) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்திய அணி தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றியது. நிதானமாக விளையாடிய இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 26 ஓவரில் 100 ரன்களை எட்டியது.
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அதிரடியாக அரைசதம் அடித்தனர். தொடர்ந்து, விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Discussion about this post