சசிகலா இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி சிறையிலிருந்து வெளி வந்தார் சசிகலா. அப்போதிருந்தே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், டி.டி.வி.தினகரனையும், சசிகலாவையும் விமர்சனம் செய்து வந்தார். சசிகலா வருவதற்கு முன்பு சில அதிமுக ஆதரவாளர்கள் அவருக்கு போஸ்டர் ஒட்டினர். இதனை விமர்சித்துப் பேசிய சி.வி.சண்முகம், சசிகலாவை எதிர்த்து நான் ஆயிரம் போஸ்டர்கள் அடிப்பேன் என தடாலடியாகக் கூறினார்.
அதேபோல டி.டி.வி.தினகரன் குறித்தும் பேசிய அவர், “என்னை நிதானமாகப் பேசினாரா என்று டி.டி.வி., கேட்கிறார். ஆமா இவர் தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது டி.டி.வி.தினகரனோட குலத்தொழில் அதான். ஊத்தி ஊத்திக்கொடுத்தே குடிய கெடுத்தவனுங்க அவனுங்க. கூவத்தூர்ல அது மாறி தான் ஊத்தி கொடுத்தான். இல்லைனு சொல்ல சொல்லு அவன” என பயங்கரமாக தாக்கி பேசினார். இச்சூழலில் தற்போது சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஆவேசமாகப் பதிலளித்த அவர், “இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே, அவருக்கு உதவியாளராக வந்தார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது.
எங்கள் மூத்தவர் காளிமுத்து, கருவாடு மீன் ஆகாது என்று சொன்னார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வசனம். கருவாடு கூட மீனாகிவிடலாம். ஆனால், அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது. ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல. ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் நடந்த சட்டமன்றத்தேர்தலில் தோல்வியை தழுவினார்.