கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக இருப்பவர் செங்குட்டுவன். இவர், அந்த மாவட்டத்தில் தொழிலதிபரும், ரஜினி மன்ற மாவட்டச் செயலராகவும் இருந்த மதியழகனை, 2018ம் ஆண்டு கட்சிக்குள் இழுத்து வந்தார். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்கிற உண்மையை நன்றாகவே தெரிந்து கொண்ட மதியழகன், தலைமைக்கு நெருக்கமாகி விட்டார். அதே வேகத்தில், மாநில விவசாய அணி துணை தலைவர் பதவியையும் வாங்கி விட்டார்.
தற்போது செங்குட்டுவனை மதியழகன் கண்டு கொள்வதே இல்லை. அதுவும் இல்லாமல் செங்குட்டுவன் ஆதரவாளர்கள் பலர், மதியழகன் முகாமுக்கு மாறி விட்டார்கள். இதனால் மதியழகனுக்கு, ‘செக்’ வைக்கும் விதமாக ரஜினி மன்றத்தின் தற்போதைய மாவட்டச் செயலாளரும், தொழிலதிபருமான கே.வி.எஸ். சீனிவாசனுடன் செங்குட்டுவன் நெருக்கமாகி விட்டார். ரஜினியே கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்து இருக்கிற சூழலில் சீனிவாசன் சமீபத்தில் ஸ்டாலினை பார்த்து, 51 லட்சம் ரூபாய் கொடுத்தார். மதியழகனை ஓரம்கட்ட சீனிவாசனை, செங்குட்டுவன் கட்சிக்குள் சேர்த்தாலும் ஆச்சரியமில்லை என திமுகவினரே பேசிக் கொள்கிறார்கள்.