எடப்பாடியாருடன் சமரசம்..! சசிகலா போடும் புது கணக்கு… அதிமுகவில் பரபரப்பு…!

0
தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறியிருந்த சசிகலா தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் அரசியல் களத்திற்கு வருவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது அரசியல் நடவடிக்கைகளை சசிகலா தீவிரப்படுத்தினார். ஆனால் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு ஒதுங்கினார். அதன் பிறகு கோவில் கோவிலாக சென்று வந்த சசிகலா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு புதிய திட்டத்துடன் அரசியல் களம் காண தயாராகி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை சசிகலா எதிர்பார்த்த ஒரு முடிவு கிடைத்துள்ளது. ஆனால் கொங்கு மண்டலத்தில்  அதிமுக பெருவெற்றி பெற்றது சசிகலாவை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படு தோல்வி அடையும் என்பதே சசிகலாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. திமுக குறைந்த பட்சத் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றும் அவர் கணக்கு போட்டு வைத்திருந்தார். தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் தோற்பார்கள் என்றும் சசிகலா நினைத்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு தேர்தல் முடிவு வந்தால் அது தனது அரசியல் ரீ என்ட்ரிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதும் சசிகலாவின் கணக்கு. அதாவது தேர்தலில் படு தோல்வி அடைந்தால் இயல்பாக அ திமுக முக்கிய நிர்வாகிகள் பார்வை தன் பக்கம் திரும்பும் என்பது சசிகலாவின் எதிர்பார்ப்பு.
ஆனால் தேர்தல் முடிவுகள் சசிகலாவின் எண்ணத்திற்கு மாறாக இருந்தது. கணிசமான தொகுதிகளில் அதிமுக வென்றது. அதிலும் கோவை, சேலம் மாவட்டங்களில் திமுகவால் ஒரு தொகுதியை தவிர வேறு எதிலும் வெல்ல முடியவில்லை. இதே போல் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும் அதிமுக வெற்றிக் கொடியை நாட்டியது. மதுரை, நெல்லையிலும் கூட அதிமுக வேட்பாளர்கள் வென்றனர். சென்னை, திருவள்ளூர் தவிர்த்து வட மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவிற்கு எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தையோ அவரது அரசியல் நடவடிக்கைகளையோ அதிமுகவில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும் கட்சியை எடப்பாடி – ஓபிஎஸ் தவறாக வழி நடத்திவிட்டதாக கூறுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லாத நிலை உள்ளது. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும் கவுரவமான தொகுதிகளில் வெற்றி என்பது அதிமுகவில் தலைமைக்கு பஞ்சம் இல்லை என்பதையே காட்டுகிறது. இதனால் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் ரீ என்ட்ரி எளிமையாக இருக்கும்எ ன்று கருதிய சசிகலாவிற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. அதே போல் சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவின் பினாமியாக களம் இறங்கிய தினகரன் படு தோல்வியை சந்தித்தார். அவரது கட்சியும் பல்வேறு இடங்களில் டெபாசிட்டை இழந்தது.
எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் மற்றும் தினகரனின் தோல்வி சசிகலாவை அரசியல் ரீ என்ட்ரிக்கு வேறு திட்டங்களை வகுக்க வைத்துள்ளது. இதனால் தான் அவர் தற்போது நிதானமாக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். முதலில் அதிமுகவின் டாப் லெவல் நிர்வாகிகளின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளவே அமமுக பிரமுகர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். இது தவிர சென்னையில் சில முக்கிய சந்திப்புகளையும் சசிகலா நிகழ்த்தியுள்ளதாக சொல்கிறார்கள். தனது அரசியல் வருகையின் போது இந்த முறை தன்னுடன் யார் யார் எல்லாம் நிற்கப்போகிறார்கள், தன்னுடைய வலது கரமாக இந்த முறை யாரை முன்னிறுத்துவது என்பது போன்ற யோசனைகளை சசிகலா தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதலே சிந்திக்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அதிமுகவில் பெரிய அளவில் மாற்றங்களை செய்துவிட முடியாது என்பதையும் சசிகலா உணர்ந்துள்ளார். அதே நேரம் ஓபிஎஸ்சால் எடப்பாடிக்கு எந்த பயனும் இல்லை என்பதையும் சசிகலா தெரிந்து வைத்துள்ளார். இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அதிமுகவின் தனது ரீ என்ட்ரி  குறித்து எடப்பாடியிடம் சமரசம் பேசுவது தான் சசிகலாவின் முதல் திட்டமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் இதனை எடப்பாடி எப்படி பார்ப்பார் என்பது போகப் போகத்தான் தெரியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here