நெல்லை சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் ஆன் லைனில் பாடம் நடத்தும் சாக்கில் மாணவியின் செல்போன் நம்பரை பெற்று அவருடன் நட்பாக பழகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கிற்காக சொந்த ஊருக்கு தனது காரில் அழைத்து செல்வது போல நடித்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய வில்லங்க பேராசிரியர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு .
இளம் பெண் ஒருவர், நெல்லை பாளையங்கோட்டை அரசு சட்டக்கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடந்து வருவதால் பாளையங்கோடை சாந்தி நகரை சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி என்பவர் ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்துள்ளார்.
அப்போது அவர் தன்னிடம் படிக்கும் மாணவி ஒருவரின் செல்போன் நம்பரை தெரிந்துகொண்டு பேசி பழகியுள்ளார்.
அந்தவகையில் ஊரடங்கின் போது ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது தானே தனது காரில் வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறிய ராஜேஷ் பாரதி, மாணவியை நம்ப வைத்து அழைத்துச்சென்றுள்ளார். அப்போது வழியில் அவர் குளிர்பாணத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் ஆசைக்கு இணங்கச்சொல்லி மிரட்டியுள்ளார்.
இதனால் மிகுந்த வேதனை அடைந்த அந்த மாணவி நெல்லை மாநகர காவல் ஆணைய்ரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனையடுத்து, உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான உதவி பேராசிரியரை தேடிவருகின்றனர்.