பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததற்காகவும், பெண் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததற்காகவும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ஜெயலலிதா வளாகம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும், உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றும் சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சிலை நிறுவுவதற்கான பீடம் அமைக்கப்பட்ட நிலையில், மின்விளக்குகளால் சிலை ஒளிரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர்;- சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா. பெண்கள், குழந்தைகளுக்கு தமிழக அரசு அரணாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக குற்றமிழைப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் சட்ட கல்லூரிகள், 10 உறுப்பு பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 120 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உலகதரத்தில் மாதிரி பள்ளிகளாக அமைக்கப்பட்டுள்ளன. கல்வி தரத்தை மேம்படுத்த பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் தொழில்துறையில் தமிழகத்தை தலைநிமிர செய்தது அதிமுக அரசு என்றார்.
இதனையடுத்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் அரசு சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் தெரிவித்துள்ளார்.
The post ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்… எடப்பாடியார் appeared first on தமிழ் செய்தி.