76வது குடியரசு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
சேலத்தில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசியக் கொடியை ஏற்றி அமைதிப் புறாக்களை ஏவினார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச்சுடன் சேர்ந்து காவல் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், 29 காவல்துறையினருக்கு முதலமைச்சரின் சிறந்த காவல் பதக்கங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, சிறப்பாகச் செயல்பட்ட 371 அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவின் போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில், ஆட்சியர் ஆஷா அஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்துடன் இணைந்து மூவர்ண பலூன்களை அவர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.