பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை கிழித்தெறிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மாலை சீமான் காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். சீமான் மீதான இந்தப் புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கு சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அங்கிருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றினர். நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி சீமானின் வீட்டில் நேற்று சம்மன் ஒட்டப்பட்டது.
ஆனால், சம்மன் ஒட்டப்பட்டவுடன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழிக்கப்பட்டதை விசாரிக்க வந்த காவல் ஆய்வாளருக்கும் சீமானின் வீட்டுக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினருக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கேட்டபோது, அதை அவர் கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில், அவர் தலைக்கு மேலே துப்பாக்கியை உயர்த்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சுபாகர் மற்றும் அமல்ராஜ் ஆகிய இரு காவலர்களையும் போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.