2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவின் திட்டம் என்ன?… இதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு..!

0

அண்ணாமலை துண்டிக்கபட்ட பின்னர், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.ஒன்றிணைவதை மட்டுமல்லாமல், வலுவான கூட்டணியை அமைத்தாலே தி.மு.க.வை எதிர்க்கும் சக்தியாக உருவாக முடியும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்து, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. மற்றும் ஐந்து சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், இந்த கூட்டணியின் மூலம் 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களில் பலர் தோல்வியடைந்தனர்.

‘தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் முக்கிய காரணம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் வார்த்தைப் போர் அதிகரிக்க, அதற்கிடையில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முற்றிலுமாக உடைந்து போனது. அதன் பிறகு, 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்திருந்தது. ஆனால், ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.

ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலக்கப்பட்டனர். இதனால், அவர்கள் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை, அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வலுவான கூட்டணியுடன் ஆளுங்கட்சியான தி.மு.க. தேர்தல் களத்தில் இறங்க உள்ளதோடு, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியும் அரசியலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க.வுக்கும் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.விற்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் சிவராத்திரி அன்று கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின. அதன்பின், அவரது மகன் திருமண விழாவில் பா.ஜ.க.வின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, அண்ணாமலையுடன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பேசிக் கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருதினாலும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், அ.தி.மு.க. ஒன்றிணைவதுடன், வலுவான கூட்டணியை அமைத்தாலே மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். அதை வீழ்த்துவதுதான் எங்கள் நோக்கம்’ என்று கூறினார். மேலும், பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘இன்னும் 6 மாதங்கள் கழிக்கட்டும்’ என்று பதிலளித்தார்.

அதாவது, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அப்படி என்றால், அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் மனநிலையை அவரிடம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது. எனவே, தேர்தல் நாள் நெருங்க, அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான உறவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனித்துப் போட்டியிடும் சில கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க, பா.ஜ.க. முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here