18 ஆண்டுகால கனவு: முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி – கொண்டாட்டத்தில் வீரர்கள், ரசிகர்கள்!

0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த சாம்பியன் போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 190 ரன்கள் குவித்தது. ஆர்சிபிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை தொடங்கினர். இருவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், சால்ட் 9 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு ஜேமிசனின் பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் பிடித்த அருமையான பிடிப்பில் ஆட்டமிழந்தார்.

மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். சஹல் வீசிய தனது முதல் ஓவரில் அவர் வெளியேறினார். கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ஜேமிசன் வீசிய வேகமான பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்ததுடன், அஸ்மதுல்லா ஒமர்சாய் பந்தில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில், அவரும் ஜேமிசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

மற்றொரு புறம், ஜிதேஷ் சர்மா தீவிரமாக ஆடியவர். அவர் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து, பேட்டில் பந்து பட்டு இன்சைடு எட்ஜ் மூலம் போல்டாகி வெளியேறினார். ஷெப்பர்ட் 17, க்ருணால் பாண்டியா 4, புவனேஸ்வர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது.

பஞ்சாப் அணிக்கு ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அஸ்மதுல்லா, வைஷாக் விஜயகுமார் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

வெற்றிக்கான இலக்காக 191 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ப்ரியான்ஷ் ஆர்யா 24 ரன்கள் மற்றும் ப்ரப்ஸிம்ரன் சிங் 26 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஜோஷ் இங்லிஸ் 39 ரன்கள் விளாசினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் ஒரே ஒரு ரனில் வெளியேறினார். நேஹால் வதேரா 15 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணியின் நம்பிக்கையை உயிர்ப்பூட்டியவர் ஷஷாங்க் சிங். அவர் தனியாகவே 61 ரன்கள் விளாசினார். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் பஞ்சாப் அணி தடுமாறியது. 20 ஓவர்களுக்குள் 7 விக்கெட்டுகள் இழந்த பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், ஆர்சிபி அணி தனது ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here