அமெரிக்காவுக்கு அபாயகரமான பூஞ்சை கடத்தி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாக இரண்டு சீன விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த 33 வயதான யுன்கிங் ஜியான் மற்றும் 34 வயதான ஜுன்யோங் லியு என்பவர்கள் ‘ஃபுசேரியம் கிராமினேரம்’ என்ற பூஞ்சையை விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெட்ராய்ட் விமான நிலையம் வழியாக லியு இந்த பூஞ்சையை நுழைத்துள்ளார். தனது காதலி ஜியான் பணியாற்றும் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு செய்யவே இதை கொண்டு வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதே நேரத்தில், லியு சீனாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இதனைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த அபாயகர பூஞ்சையை நாட்டுக்குள் கொண்டு வந்ததை உணர்ந்த எஃப்பிஐ அதிகாரிகள் லியுவை கைது செய்தனர். இந்த பூஞ்சை விவசாயத் துறையை கடுமையாக பாதிக்கும் வகையில் பயன்படுத்தக்கூடியது என்றும், இது பயிர்களில் தலை கருகல் நோயை ஏற்படுத்தி உலகளவில் பில்லியன் கணக்கான நஷ்டத்துக்கு காரணமாகிறது என்றும் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் கூறினார். மேலும், இது மனித மற்றும் கால்நடை ஆரோக்கியத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜியான் இந்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றதாகவும், இருவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்காக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜியான் மற்றும் லியு ஆகியோர் குற்றசெயல் திட்டம், சட்டவிரோதப் பொருள் கடத்தல், பொய்யான தகவல் அளித்தல் மற்றும் விசா மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என மிச்சிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பூஞ்சை உலகளவில் கோதுமை, சோளம், பார்லி மற்றும் நெல் பயிர்களை பெரிதும் பாதித்து, மைக்கோடாக்சின் எனப்படும் ஆபத்தான கலவைகளை உருவாக்குகிறது. இது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வாந்தி, கல்லீரல் கோளாறு மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்தும் கொண்டது.