பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை

0

நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்காக பாராட்டு விழா பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுத்து, பெங்களூரு காவல் ஆணையர் உள்ளிட்ட பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த பாராட்டு விழா, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணியின் வீரர்கள் கலந்துகொண்டனர். ரசிகர்களும் அனுமதிக்கப்படினர்.

விழா நடைபெறும் இடத்திற்கு ஒரே நேரத்தில் பெருந்தொகையான மக்கள் நுழைய முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 47 பேர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“இதுபோன்ற திடீர் நிகழ்வு மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 56 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அரசு தரப்பில் வழங்கப்படும்,” என்று கூறினார்.

மேலும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். சம்பவத்துக்கு பொறுப்பாக உள்ள காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, மாநில அரசு ரூ.10 லட்சம், ஆர்சிபி அணியும் ரூ.10 லட்சம், கர்நாடக கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here