உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி ஆரம்பித்த புதிய பசுமை முயற்சிகள்

0

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி ஆரம்பித்த புதிய பசுமை முயற்சிகள்

நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி “ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டம்” என்பதைக் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

1973 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் முக்கிய பங்காற்றுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பிரதமர் மோடி டெல்லியின் பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு மரக்கன்றை நட்டார். இந்த நிகழ்வின் போது, ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை புதுப்பித்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

ஆரவல்லியின் பசுமையை மீட்டெடுக்கும் திட்டம்

பிரதமர் மேலும் கூறுகையில்:

“ஆரவல்லி மலைத்தொடர் உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று. இது குஜராத்தில் இருந்து ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி வரை பரந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இத்தொடர் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 700 கி.மீ. நீளத்தில் காடுகளை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. உள்ளூர் நிர்வாகங்களுடன் சேர்ந்து இந்த பணிகளை முன்னெடுக்கிறோம். நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது, புழுதி புயல்களை தடுப்பது மற்றும் தார் பாலைவனத்தின் பரவலை கட்டுப்படுத்துவது போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.”

சுற்றுச்சூழல் தினத்தின் போது,

“நாம் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அடிப்படை மட்டத்தில் உழைக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்,” என்று பிரதமர் கூறினார்.

பசுமையை ஊக்குவிக்கும் கூடுதல் முயற்சிகள்

“தாயின் பெயரில் ஒரு மரம்” நடும் இயக்கத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், டெல்லி நகரில் மின்சார பேருந்து சேவைகளை தொடங்கி வைத்து, பசுமை பயணத்திற்கான முயற்சியையும் துவக்கி வைத்தார். இது நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் விரிவுகள்

இந்த திட்டம், மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் 29 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மலைத்தொடரில் காடுகள் அதிகம் அழிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 81% ராஜஸ்தானில், 15.8% குஜராத்தில், 1.7% ஹரியானாவில் மற்றும் 1.5% டெல்லியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மறு காடுகள் வளர்த்தல் மற்றும் நீர்நிலைகளை புதுப்பிப்பதன் மூலம், ஆரவல்லி மலைத்தொடரில் பல்லுயிர் சுழற்சி மேம்படும். இதன் மூலம் நிலம் மற்றும் நீர்த்திறனும் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here