திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் பிறந்த நட்சத்திரமான விசாகம், வைகாசி மாதத்தில் வரும் நாளில், வைகாசி விசாக பெருநாள் திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் திருவிழா திருச்செந்தூரில் நேற்று உற்சாகமாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு கோயில் வாசல்கள் திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சென்றார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வந்த புனித நிகழ்ச்சி மற்றும் முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்வும் நடைபெற்றன. பின்னர், தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதியிலே வலம் வந்து திருக்கோயிலில் திரும்பியதும் திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி, நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பலர் புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும், சிலர் அலகு குத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள் ஆழமான கடற்பகுதியில் செல்லாமல் இருக்க கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்பட்டிருந்தன. திருவிழா நாளில், பல்வேறு தொண்டு அமைப்புகள் அன்னதானம் வழங்கின. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் சு. ஞானசேகரன் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.