பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசனம்’ நடைமுறைக்கு வருகிறது
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், சீக்கிரம் ‘பிரேக் தரிசனம்’ என்ற புதிய சேவை அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு ஒரு நபரிடம் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாவது இடம் பெறும் பழநி முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதிலும் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை தருகிறார்கள். இங்கு இலவச தரிசனத்துடன் சேர்ந்து, ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறைகளும் செயல்படுகின்றன. மேலும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தேவஸ்தானத்தின் அனுமதியுடன் விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது.
சமீப காலங்களில் பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் அதிகமான பக்தர்கள் அணுகும் முக்கிய கோயில்களில் “பிரேக் தரிசனம்” (இடைநிறுத்த தரிசனம்) ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பழநி கோயிலிலும் இந்த வசதி விரைவில் அமலுக்கு வரும்.
இந்த சேவையில், சுவாமியை விரைவாக தரிசிக்க தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். ஆனால் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பெருநாள் திருவிழாக்கள், மாத கிருத்திகை, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு போன்ற முக்கிய 44 நாட்களில் இந்த வசதி அமல்படுத்தப்படாது.
ரூ.500 கட்டணத்தில் இந்த தரிசன வசதி பெறும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், விபூதி மற்றும் மஞ்சப்பை அடங்கிய பிரசாத தொகுப்பு வழங்கப்படும்.
மேலும், இந்த புதிய சேவையைப் பற்றி பக்தர்களுக்கு ஏதும் கருத்துகள் அல்லது எதிர்ப்புகள் இருந்தால், எழுத்து மூலமாக 29-ம் தேதிக்குள் பழநி தேவஸ்தான அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ தெரிவித்திடலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.