ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரம்: அணு தாக்குதல், வான் தாக்குதல், சர்வதேச பதட்டம்

0

ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரம்: அணு தாக்குதல், வான் தாக்குதல், சர்வதேச பதட்டம்

இஸ்ரேல் ஒரே நாளில் இருமுறை நடத்திய தாக்குதலுக்கு பதிலாக, ஈரான் நேற்று ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. இதில் இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி முகமை (IAEA) கடந்த மே 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் 60% தூய்மையுள்ள யுரேனியத்தை வைத்துள்ளதாக, மேலும் 90% செறிவாக்கம் செய்தால் 9 அணு ஆயுதங்களை விரைவில் உருவாக்கக்கூடியதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்கா ஈரானுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கி, அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட அழைத்தது. அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால், இஸ்ரேல் விமானப்படை 200 போர் விமானங்களை ஈரானில் 100 இலக்குகளை நோக்கி அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. 78 பேர் உயிரிழந்தனர், 320 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பதிலளிக்க, ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் குறிவைக்கப்பட்டன. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் மக்கள் பதுங்கும் குழிகளில் ஒளியுண்டனர். இஸ்ரேல் பயன்படுத்தும் “அயர்ன் டோம்” ஏவுகணைகள் இந்த தாக்குதலை முற்றிலும் தடுக்க முடியவில்லை. டெல் அவிவில் ராணுவ தலைமையகம் மீது குண்டுகள் விழுந்தன. 3 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி, ‘‘இஸ்ரேலை எதிர்த்து போரிட தயார் நிலையில் இராணுவம் உள்ளது’’ என்றார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ‘‘ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு இஸ்ரேலுக்கு ஆபத்து. அதனால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடரும்’’ என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சரும் ஈரானை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரிக்கிறது.

சர்வதேச நிலைமை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரானுக்கு முன்பே வாய்ப்பு கொடுத்தேன். பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரேல் தாக்குதல் ஐ.நா விதிமுறைக்கு எதிரானது என கண்டித்தார். இரு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியும் உள்ளார்.

எண்ணெய் விலை உயர்வு

இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 டாலர் உயர்ந்து 78 டாலருக்கு சென்றது. பின்னர் 74 டாலராக குறைந்தது.

எஸ் அண்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்ட் ஜோஸ்விக், “போரால் எண்ணெய் விலை உயரலாம். ஆனால், விநியோகம் பாதிக்கப்படுவதுதான் முக்கியம்” எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. போர் தீவிரமானால், இங்கு போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here