அகமதாபாத் விமான விபத்து – துருக்கி நிறுவனம் மறுப்பு தெரிவித்தது
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா சொந்தமான போயிங் 787-8 விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததாகச் சில செய்திகள் வெளியான நிலையில், அதில் சதி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் துருக்கியின் விமான விபத்து புலனாய்வு குழு அகமதாபாத்துக்கு வருகைதந்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட போயிங் 787-8 விமானம் தங்களால் பராமரிக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். குறிப்பாக, அந்த விமானம் துருக்கி தொழில்நுட்ப குழுவின் பராமரிப்பு ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்றும், இதுவரை ஏர் இந்தியாவின் அத்தகைய விமானங்களை பராமரித்ததில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஏர் இந்தியா மற்றும் துருக்கி நிறுவனத்துக்கிடையேயான ஒப்பந்தங்களில், பி777 வகை விமானங்களின் பராமரிப்பு மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய விபத்து விமானம் அதில் இடம்பெறவில்லை என்றும் கூறினர்.
இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் பெரும் சோகம் ஏற்பட்டது. துருக்கி அரசு இதற்கான துயரத்தை உணர்ந்து இந்திய மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வெளியிட்டது.
இதனையடுத்து, பாபா ராம்தேவ் உள்ளிட்ட சிலர், விமான பராமரிப்பு சதியாக இருக்கக்கூடும் எனக் கூறி விமானப் போக்குவரத்து துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
தற்போது, விபத்தில் உயிரிழந்த 19 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 11 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.