புனே: சுற்றுலா பயணிகள் சிக்கிய பாலம் விபத்து – 2 பேர் உயிரிழப்பு உறுதி
புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தாலுகாவின் குண்ட்மாலா பகுதியில் அமைந்திருந்த இந்திரயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட இரும்புப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவ்விபத்தில் இதுவரை இரண்டு உயிரிழப்புகள் உறுதியாகியுள்ளன. மேலும், பலர் பாலத்தின் கீழ் சிக்கியிருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில், 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இரு பெண்கள் பாலத்தின் கீழ் சிக்கி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
விபத்து நேரம், பாலத்தில் சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பெருக்கெடுத்து ஓடிய நீர் வெள்ளம், பாலத்தின் இடிவை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிவாரண நடவடிக்கைகளில் 15 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த பாலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.