கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

0

கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

உத்தராகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவை சார்தாம் யாத்திரை என அழைக்கப்படும் முக்கிய புனித தலங்களாகும். 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட கேதார்நாத் கோயில், வருடம் தோறும் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

இந்த ஆண்டு மே 2-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களது வசதிக்காக ஹெலிகாப்டர் சேவையும் ஏற்பாடாக உள்ளது. கேதார்நாத்தில் 3 ஹெலிபேட்கள் உள்ளன, அங்கு 9 தனியார் நிறுவனங்கள் சேவையை வழங்குகின்றன.

நேற்று கேதார்நாத்திலிருந்து குப்தகாஷிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று, கவுரிகண்ட் மற்றும் சோன்பிரயாக் வனப்பகுதியில் பறந்து சென்றபோது திடீரென விழுந்து சிதைந்தது. இதில் விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

விபத்து தொடர்பாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு சடலங்களை மீட்டனர்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த துயர சம்பவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்ததாக மாநில விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி சோனியா தெரிவித்தார். இதன் காரணமாக ஹெலிகாப்டர் சேவைகள் இருநாள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், சோன்பிரயாக் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சரிந்ததால் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதைகள் சீரமைக்கப்படும் வரை பக்தர்கள் தங்கிய இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 6 வாரங்களில் 5 ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை வகுப்பதற்காக உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

டேராடூனில் ஹெலிகாப்டர் சேவைகளுக்காக தனி கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். அனுபவமுள்ள விமானிகளை மட்டுமே பணியில் அமர்த்துதல், மோசமான வானிலையின்போது ஹெலிகாப்டர் சேவையை தவிர்த்தல் போன்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here