மேற்கு இந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பிரெடி மைதானத்தில் நடைபெற்றது
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது டி20 கிரிக்கெட் போட்டி, வடக்கு அயர்லாந்தில் அமைந்துள்ள பிரெடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் கடந்த இரவு நடந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது.
அணியின் தொடக்க வீரர் எவின் லீவிஸ் 44 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடித்து 91 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உதவியுடன் 51 ரன்கள் சேர்த்தார். கீசி கார்ட்டி 22 பந்துகளில் 4 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடித்து 48 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் அயர்லாந்தின் மேத்யூ ஹம்ப்ரேஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
257 ரன்கள் வெற்றிக்காக களமிறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 194 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இவ்வாறு மேற்கு இந்தியத் தீவுகள் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து அணியில் ராஸ் அடேர் 48 ரன்கள், ஹாரி டக்டர் 38 ரன்கள் மற்றும் மார்க் அடேர் 31 ரன்கள் எடுத்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக அகீல் ஹோசைன் 3 விக்கெட்களையும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
மழையின் காரணமாக முதல் இரண்டு போட்டிகள் ரத்தாகிய நிலையில், இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1-0 என கைப்பற்றி சாம்பியன் ஆனது.