அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு
அமெரிக்காவுக்கான ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிர், தீவிர எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் ஃபீல்டு மார்ஷல் பட்டம் அளிக்கப்பட்டது. இது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையின் தோல்வியை மறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வெள்ளை மாளிகை இதனை மறுத்துவிட்டது. அமெரிக்கா – பாகிஸ்தான் இருதரப்பு ராணுவ உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்திலேயே அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, அவர் எந்த அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
வாஷிங்டனில் அவர் தங்கியிருந்த ஹோட்டலை, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்ஸாப் (PTI) கட்சியின் ஆதரவாளர்கள் சூழ்ந்தனர். ‘ஜனநாயக ஆதரவாளர்களை அடக்கும் கொடூரத் தலைவன்’ என அவர் மீது முழக்கமிட்டனர். ‘‘பாகிஸ்தானில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடும் மக்களை அடக்கும் அராஜக அதிகாரி. உங்கள் செயல்கள் நாட்டு மக்களுக்கு வெட்கம்’ எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.
ஓட்டலுக்குள் நுழைய முயன்ற சிலரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், இம்ரான் ஆதரவாளர்களும் அதிகாரிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஹோட்டலின் அருகிலுள்ள எலக்ட்ரானிக் திரையில் ‘ஜனநாயக மக்களை அடக்கும் அசிம் முனிர் ஒரு கொடூர நபர்’ என சுட்டிக்காட்டும் விளம்பரங்களும் இடப்பட்டன.
இந்நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழலில் இம்ரான் கானின் கட்சி ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. ராணுவத் தளபதி ஆசிம் முனிர், இம்ரானுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டும் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க பயணம் அவருக்கு பெரும் பரபரப்பையும், அழுத்தமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.