மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் குறைந்த செலவிலான பயணத்தை உறுதி செய்ய, ரூ.3,000 கட்டணத்தில் பாஸ்டேக் தொழில்நுட்பம் கொண்ட வருடாந்திர பாஸ் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர்.
இந்த புதிய திட்டம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இது தனிநபர் ஓட்டும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பாஸின் காலவரம்பு அது பெறப்படும் நாளிலிருந்து ஒரு ஆண்டு அல்லது 200 பயணங்கள் — இதில் எது முதலில் முடியுமோ, அது வரை செல்லுபடியாகும்.
இந்த பாஸ் பெறவும், புதுப்பிக்கவும் விரைவில் ‘ராஜ்மார்க் யாத்ரா’ செயலி, NHAI இணையதளம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சின் இணையதளம் ஆகியவற்றில் இணைப்புகள் (Links) செயல்படுத்தப்படவுள்ளன.
60 கி.மீ. தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பாக நீண்டநாளாக எழுந்து வரும் கோரிக்கைகளுக்கு இது சரியான தீர்வாக அமையும். மேலும், ஒரே பரிவர்த்தனையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்துவதன் மூலம், காத்திருப்பு நேரமும் வாகன நெரிசலும் குறையும். சுங்கச்சாவடிகளில் நிகழும் வாக்குவாதங்களை தவிர்த்தலும் இது வழிவகுக்கும்.
இதன் மூலம் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.