“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது – ட்ரம்ப் கருத்தில் மாற்றம்”
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு “நான்தான் காரணம்” என தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இப்போது தனது நிலையை மாற்றியுள்ளார். “இந்த போர்நிறுத்தம் இரு நாடுகளின் தலைவர்களின் முயற்சியால் ஏற்பட்டது; அமெரிக்கா இதில் எந்தவித பங்கும் வகிக்கவில்லை” என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றமான கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான விளக்கத்திற்கு பிறகு வந்தது. ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலாக மே 7-ம் தேதி இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவை தாக்க முயன்றதையும் இந்தியா தடுத்தது. மே 10-ம் தேதி இந்த திடீர் மோதல்கள் நிறைவுபெற்றன.
இந்த தகவலை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்குமுன் ட்ரம்ப், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன” என தெரிவித்திருந்தார். இது இந்தியாவில் கடும் எதிர்ப்பை எழுப்பியது. இந்தியா, “பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தது.
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி, ட்ரம்புடன் நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தாலும், ட்ரம்ப் முன்பே நாடு திரும்பியதால் அது சாத்தியமாகவில்லை. இருப்பினும், இருவரும் தொலைபேசியில் 35 நிமிடங்கள் பேசி, மோடி தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறினார்.
மோடி கூறியது: “ஆபரேஷன் சிந்தூர் ஒரு துல்லியமான தாக்குதல். பாகிஸ்தானின் கோரிக்கையின் அடிப்படையில்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இது இரு நாடுகளின் நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாகவே ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு இதில் பங்கு இல்லை. இந்தியா எப்போதும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்காது.”
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறியதாவது:
“பாகிஸ்தான் ராணுவ தளபதி ஈரான்-இஸ்ரேல் விவகாரங்களை நன்கு அறிந்தவர். இந்தியாவுடன் நடந்த போர் நிறுத்தம் அவரால் புரிந்து கொள்ளப்பட்டது. போரை தொடராமலிருக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது. நாங்கள் இது குறித்து பேசினோம். இது அணுசக்தி நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய வெடிபடக்கூடிய நிலைமையாக மாறியிருக்கலாம். ஆனால் இரு தலைவர்களும் புத்திசாலியாக போருக்கு Full Stop வைத்தனர். இதிலே மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.”
இவ்வாறு, முன்பு தானே காரணம் என கூறிய ட்ரம்ப், இப்போது இரு நாடுகளின் தலைவர்களே காரணம் என ஒப்புக்கொள்வது முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.