டெல்லியில் வகுப்பறை கட்டட பணிகளில் ரூ.2,000 கோடி ஊழல்? – அமலாக்கத் துறை விசாரணை தீவிரம்
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்த காலத்தில் டெல்லியில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2,000 கோடியைத் தொட்ட அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் டெல்லியில் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில், வகுப்பறை கட்டடங்களில் பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை தனிப்பட்ட வழக்காக பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது. தற்போது வரை, இந்த வழக்கில் தொடர்புடையதாக 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
அமலாக்கத் துறையின் தகவலின்படி, ஒரு வகுப்பறையை சுமார் ரூ.5 லட்சத்தில் கட்ட முடிந்தபோதிலும், அதற்கு பதிலாக அரசு வகுப்பறை ஒன்றுக்கு ரூ.24.86 லட்சம் செலவழித்ததாக தகவல்கள் உள்ளன. மேலும், 1,214 கழிப்பறைகள் வகுப்பறைகளாக காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற பல்வேறு மோசடிகள் மூலம் மொத்தத்தில் ரூ.2,000 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த கட்டட திட்டங்களில் 34 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும் ஆம் ஆத்மிக்கு நெருங்கியவர்கள் அல்லது பினாமிகள் என தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா புதிய முதல்வராக பதவியேற்ற பின்னர், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக்கால ஊழல் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று பின் தொடர்ந்தும் வெளியாகி வருகின்றன.