5 ஆண்டுகள் கழித்து, சிக்கிம் மாநிலத்தின் நாதுலா மலைவழியாக கைலாஷ் மானசரோவருக்கு ஆன்மிகப் பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீன இராணுவங்களுக்கு இடையே 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக நாதுலா வழியாக செல்லும் கைலாஷ் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த வழியாக யாத்திரை மீண்டும் தொடரப்படுகிறது.
இந்த புனிதப் பயணம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரியை நோக்கி செல்லும் இந்த யாத்திரை, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் மேற்கொள்ளப்படும் மிகுந்த ஆன்மிகத்தன்மை கொண்ட பயணமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு, முதல் குழுவாக 33 யாத்திரிகர்கள் நாதுலா வழியாக புறப்பட்டுள்ளனர். அவர்களுடன் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 2 அதிகாரிகள் மற்றும் 1 மருத்துவர் ஆகியோர் இணைந்துள்ளனர். மொத்தம் 36 பேர் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த யாத்திரையை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் அவர் கூறியதாவது:
“இந்த வரலாற்று சிறப்பும் ஆன்மிக அர்த்தமும் கொண்ட பயணம், சிக்கிம் வழியாக முன்னேறுவது மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வாகும். இது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம். இவ்வழியாக யாத்திரை மீண்டும் துவங்கும்படி உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றியினை தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.