ஹரியானா அரசு அலுவலகங்களில் யோகாவிற்கு தினசரி 5 நிமிட இடைவெளை: முதல்வர் சைனி அறிவிப்பு
11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில், யோகா குரு ராம் தேவ் தலைமையில் மாநில அளவிலான யோகா விழா நேற்று நடைபெற்றது. இதில், ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கலந்து கொண்டு பேசினார்.
அவர் தெரிவித்ததாவது:
“இந்த ஆண்டு யோகா தினக் கொண்டாட்டம் ஹரியானாவில் மே 27ஆம் தேதியிலிருந்தே ஆரம்பமாகி, மாநிலம் முழுவதும் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. யோகா என்பது ஒரே உடற்பயிற்சி என அல்ல; அது ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல் முறை. இது மனித சமுதாயத்தின் மொத்த நலனுக்கே பயனளிக்கிறது.
மாநிலத்தில் யோகா தொடர்பான ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுதோறும் சிறந்த ஆய்வாளர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகா பாடப்பிரிவுகள் அறிமுகமாகும். மாநில விளையாட்டு துறையின் கீழ் 40 யோகா பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினசரி 5 நிமிடங்கள் யோகாவிற்கான இடைவெளி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில், ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மாநில சுகாதார மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் குமாரி ஆர்த்தி சிங் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர்.