பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் நலத்திட்ட அறிவிப்பு
பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தின் சில முக்கிய பிரிவினருக்கான மாதாந்திர நிதியுதவியை ரூ.400 இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
அடுத்த அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிஹார் மாநிலத்தில் ரூ.5,736 கோடிக்கு மதிப்பிடப்பட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணியின் தவறான நிர்வாகத்திலிருந்து பிஹார் மீட்கப்பட்டதிலிருந்து, மாநிலம் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறி வரும் இந்த காலகட்டத்தில், பிஹார் மாநிலத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று, முதல்வர் நிதிஷ்குமார், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தியதாக அறிவித்தார். இது பிஹார் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“இத்தகைய ஆதரவுத் தொகையை உயர்த்துவதில் எனக்கு பெருமை உள்ளது. இந்த மாற்றம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும். மாதந்தோறும் 10-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தொகை செலுத்தப்படும். இதனால் சுமார் ஒரு கோடியே 9 லட்சத்து 69,255 நபர்கள் பயனடைவார்கள்.”
மேலும், “முதியோர் நமது சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்கள். அவர்களுக்கு மரியாதையான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும்,” என அவர் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமத் தலைவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் ரூ.10 லட்சம் வரை மதிப்புடைய திட்டங்களுக்கு அவர்களே நேரடியாக ஒப்புதல் வழங்க முடியும். இதற்கு முன் இந்த வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது.
பஞ்சாயத்து ராஜ் நிர்வாகத்தின்கீழ் ஜில்லா பரிஷத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதசம்பளம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துணைத் தலைவர்களுக்கு அது ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ரூ.5,000 தொகை, தற்போது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.