ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை அவசியம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.
மின்சாரம் உற்பத்திக்காகவே அணுசக்தியைப் பயன்படுத்துகிறோம் என பல ஆண்டுகளாக கூறி வந்த ஈரான், சமீபத்தில் திடீரென அணு ஆயுதம் உருவாக்கும் திட்டத்தில் ஈடுபடுவதாகவும், அணு ஆயுத பரவலை தடுக்கும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகவும் அறிவித்தது. “எங்களை எது செய்ய வேண்டும் என எவரும் கட்டாயப்படுத்த முடியாது” எனவும், ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தக்த் ரவாஞ்சி கூறினார்.
இதனால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டன. அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் ஃபர்தோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய முக்கியமான மூன்று அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த GBU வகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த இடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன என அமெரிக்கா தெரிவித்தது.
தாக்குதலுக்கு முந்தைய செயற்கைகோள் படங்களில் ஃபர்தோ மையம் அருகே 16 லாரிகள் காணப்பட்டன. ஆனால் தாக்குதலுக்குப் பிறகு வெளியான படங்களில் அவை இல்லாமல் போனதைச் சுட்டிக்காட்டி, ஈரான் அந்த 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு எங்காவது மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் கூறுகிறது. அந்த லாரிகளில் என்ன ஏற்றப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை.
இஸ்ஃபஹான் அருகேயுள்ள மற்றொரு இடத்தில் இந்த யுரேனியம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சந்தேகம் தெரிவித்துள்ளன. அந்த யுரேனியத்தை 90% வரை செறிவூட்டினால், 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும். எனவே, ஈரானில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமைத் தலைவர் ரஃபேல் கிராஸி வலியுறுத்துகிறார்.
மற்றொரு ஈரான் அணு விஞ்ஞானியின் கொலை: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்வெடிப்பு சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதி அறிவிப்பதற்கு முன்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடேகி சாபர் கொல்லப்பட்டார். வடக்கு ஈரானில் உள்ள அஸ்தானே-யா-அஷ்ராபியா என்ற இடத்தில், தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் தாக்கப்பட்டார். இந்த தகவலை ஈரான் தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. இவர்மீது அமெரிக்கா முன்பே தடை விதித்திருந்தது. மேலும், சில நாட்களுக்கு முன் டெஹ்ரானில் நடந்த மற்றொரு தாக்குதலில், முகமது ரெசாவின் 17 வயது மகனும் உயிரிழந்தார்.