இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பை “ஆபரேஷன் சிந்தூர்” உலகிற்கு காட்டியது – பிரதமர் மோடி
ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குருவும், மகாத்மா காந்தியும் இடையே நடைபெற்ற உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பாதுகாப்பு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.
அதில் அவர் கூறியதாவது:
“தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள், உலகம் முழுவதும் ஒரு உதாரணமாக இருக்கின்றன. இந்தியரை குறிவைக்கும் தீவிரவாதிகளுக்கு உலகில் எங்கு இருந்தாலும் அவர்கள் மறைவிடம் கிடையாது. அவர்களை தேடி சென்று நாம் தண்டிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ இதற்கான சான்றாகும்,” என அவர் தெரிவித்தார்.
அதோடு, “பாகுபாடில்லாத ஒரு வலுவான இந்தியாவை காண விரும்பிய ஆன்மீக தலைவர்கள் கூறிய பாதையில் நமது அரசு பயணிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நமது அரசு இந்தியாவை சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறைகளில் பலப்படுத்த செயல்பட்டுள்ளது,” என்றார்.
“நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாடுகளின் மீது நாம் இப்போது குறைவாகவே சார்ந்துள்ளோம். இந்திய இராணுவம், வெறும் 22 நிமிடங்களில் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு எதிரிகளை சாமர்த்தியமாக தோற்கடித்துள்ளது. எதிர்காலத்தில் இந்திய தயாரிப்புகளுக்கான தேவையும் விருப்பமும் உலகளவில் அதிகரிக்கும்,” என்று மோடி குறிப்பிட்டார்.
மேலும், வீட்டுவசதி, குடிநீர் மற்றும் சுகாதார காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு பலம் அளித்துள்ளன என்றும் கூறினார்.
“கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகமான ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.