ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரம் முன்பாகவே தற்போதைய முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டின் உறுதிப்பாடு இல்லாமல் பொதுமக்கள் தங்களின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யும் போது சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்த சூழலை மனதில் கொண்டு, முன்பதிவு அட்டவணையை ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்ற ரயில்வே வாரியத்தின் பரிந்துரையை செயல்படுத்துவதற்காக, துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரயில்வே வாரியம் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறையை அறிவித்துள்ளது. அதன் விவரப்படி, அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு உரிய அட்டவணை முந்தைய நாள் இரவு 9 மணிக்கே தயாராகும். பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான அட்டவணை, அவற்றின் புறப்பாடு நேரத்திற்கு 8 மணி நேரம் முன்பாக வெளியிடப்படும்.