குஜராத், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் 1 கோடியை எட்டிய மூன்றாவது மாநிலமாக அமைந்தது

மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 1 கோடியை கடந்த மூன்றாவது இந்திய மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை (NSE) அறிவித்துள்ளது.

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில், NSE வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

“முக்கியமான ஒரு மைல்கல்லாக, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்துக்குப் பின், 1 கோடி முதலீட்டாளர்களை கடந்த மூன்றாவது மாநிலமாக குஜராத் திகழ்கிறது” என NSE தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களும் சேர்ந்தது, நாட்டின் மொத்த முதலீட்டாளர்களில் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

மே 2025 நிலவரப்படி, இந்தியாவில் பங்குச் சந்தைகளில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.5 கோடியை அணுகியுள்ளது.

பிராந்திய அடிப்படையில் பார்வையிடும்போது, வட இந்தியா 4.2 கோடி முதலீட்டாளர்களுடன் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு இந்தியா 3.5 கோடியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தென்னிந்தியா 2.4 கோடியுடன் மூன்றாம் இடத்தில் இருக்க, கிழக்கு இந்தியா 1.4 கோடி முதலீட்டாளர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில், வட மாநிலங்களில் 24% வளர்ச்சியும், கிழக்கு மாநிலங்களில் 23%, தென் மாநிலங்களில் 22% வளர்ச்சியும் பதிவாகியுள்ளன. மேற்கு இந்தியா 17% வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது சிறிது குறைவாக உள்ளது.

2024 பிப்ரவரியில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருந்த நிலையில், ஒவ்வொரு 5 முதல் 6 மாதங்களில் ஒரு கோடியை கடந்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 2024-ல் 10 கோடியையும், ஜனவரி 2025-ல் 11 கோடியையும் எட்டியுள்ளது.

Facebook Comments Box