“பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கு கூடச் செல்ல முடியும்; ஆனால் அவரைப் போல் நாங்கள் செல்ல இயலாது,” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சனமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அடிக்கடி நடைபெறும் வெளிநாட்டு பயணங்களை சுட்டிக்காட்டியபடி, சட்டப்பேரவையில் உரையாற்றிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இவரது விமானப் பயணங்களை சாடியபடி பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:

“பிரதமர் மோடி தன் சிறப்பு விமானத்தில் பயணிக்கும்போது, கீழே பார்த்து ‘இது எந்த நாடு?’ என்று கேட்டுவிடுவார். உடனே அதிகாரிகள் பதிலளிப்பார்கள். அதற்குப் பிரதமர், ‘பரவாயில்லை, நம்முடைய பயணம் ஒரு மணி நேரம் தாமதமாகலாம்; அதுவரை இங்கே தரையிறங்கலாமே’ என்று சொல்லிவிடுவார். அவர் விருப்பப்பட்டால் எந்த நாட்டிலும் விமானத்தை தரையிறக்க வைக்க முடியும். பாகிஸ்தானில் கூட அவர்கள் விமானத்தை நிறுத்தியதுண்டு. அங்கே சென்று பிரியாணி சாப்பிட்டு மீண்டும் புறப்பட்டுவந்தார். ஆனால் நாங்கள் எவரும் அப்படி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது. அவருக்கு மட்டும் அந்தச் சுதந்திரம் உண்டு!” என்றார்.

2015-ம் ஆண்டு மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தைக் குறிப்பிட்டு, மான் மேலும் பேசினார்.

அந்த ஆண்டு ரஷ்யாவுக்குப் பயணம் முடித்த பிரதமர், திரும்பும் வழியில் ஆப்கானிஸ்தானில் தங்கிய பிறகு, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்திக்க பாகிஸ்தானுக்கு செல்லும் வகையில் திட்டமிடாமல் திடீரென பயணித்தார். இதைத்தான் பகவந்த் மான் நினைவூட்டினார்.

மேலும், அந்த வார ஆரம்பத்தில் ஒரு நிகழ்வில் பேசியபோதும், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக இதே போன்ற விமர்சனங்களை மான் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த வெளிநாட்டுறவு அமைச்சகம், மானின் பெயரை குறிப்பிடாமல், அவரது கருத்துகள் “பொறுப்பற்றவை மற்றும் வருந்தத் தக்கவை” என சுட்டிக்காட்டியது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பஞ்சாப் முதல்வர் கூறியது:

“நாட்டின் வெளிநாட்டு கொள்கைகள் பற்றி கேள்வி எழுப்ப என்னிடம் உரிமை இல்லை என்றார்களா? எனக்கு அந்த உரிமை இருக்கிறது. எதிர்காலத்திலும் இது போன்ற கேள்விகளை நான் தொடர்ந்து கேட்பேன். நமது நாட்டில் 140 கோடி மக்களிருக்கின்றனர். அவர்கள் பிரதமருடன் நேரடியாக கலந்துரையாட விரும்புகிறார்கள். பிரதமர் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று உறுதிமொழி அளிக்கிறார். ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையில் நீண்டநாள் நிலவி வரும் நீர் பிரச்சினையைச் சரி செய்ய முடியாத நிலை உள்ளது,” எனக் கூறினார்.

Facebook Comments Box