திருட்டு புகார் அளித்த பேராசிரியை நிகிதா, தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் – மதுரையில் விசேட துப்பறியும் நடவடிக்கை

மடப்புரம் கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு குற்றச்சாட்டு சுமத்திய திருமங்கலம் கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவருடைய தாயார் மீது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமியம்மாள் கடந்த ஜூன் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வந்திருந்தனர். அந்த நேரத்தில் காரில் வைத்திருந்த நகை காணவில்லை என கூறி, காவலர் அஜித்குமாரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. அவர்கள் மடப்புரம் கோயில், திருப்புவனம் போலீஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் நேரில் சென்று விசாரணை செய்துள்ளனர்.

அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவரான அருண்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவின், வினோத்குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன்குமார், மேலும் தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் கடந்த ஜூலை 18ஆம் தேதி மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், சம்பவத்திற்கு முன்னதாக திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் பேரில் அவர்கள் இன்று (வியாழன்) மதியம் 2 மணிக்கு மேல் சிவப்பு நிற காரில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

அவர்கள் இருவரிடமும் சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழு பல்வேறு கேள்விகளை எழுப்பி, நகை எப்போது, எந்த இடத்தில் காணவில்லை என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தது. புகாரின் உண்மை நிலை குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Facebook Comments Box