5 வருடங்கள் கழித்து சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் இந்திய விசா வழங்கத் தொடக்கம்!

5 வருடங்கள் கழித்து சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் இந்திய விசா வழங்கத் தொடக்கம்!

2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்திய அரசு அனைத்து சுற்றுலா விசாக்களையும் இடைநிறுத்தியிருந்தது. தற்போது, ஜூலை 24-ம் தேதியிலிருந்து சீனாவைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்திய சுற்றுலா விசா மீண்டும் வழங்கப்படுவதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் முதலாவது முறை ஆகும்.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீன நாட்டின் குடிமக்கள் இந்திய சுற்றுலா விசாவிற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிறகு, தங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்து, பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய நகரங்களில் உள்ள இந்திய விசா மையங்களுக்கு நேரில் சென்று பாஸ்போர்டும் தேவையான ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும்,” என கூறப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய – சீன ராணுவ மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன. 1962 பிந்தைய காலத்தில் இதுவே மிகப்பெரிய பரபரப்பான நிலைமையாக இருந்தது. அதன் பிறகு நடைபெற்ற பலத்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், கிழக்கு லடாக்கில் இரு தரப்பினரும் தங்கள் படைகளை பின்வாங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கசான் நகரில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் முக்கிய முடிவுகளை எடுத்தனர். சீனா தொடர்ந்து இந்திய மாணவர்கள் மற்றும் தொழில்வழி பயணிகளுக்கு விசா வழங்கத் தொடங்கியிருந்தாலும், சுற்றுலா பயணங்களுக்கு தடை தொடர்ந்துவந்தது. தற்போது அந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box